தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான “தாய்க்கிழவி” பாடல் மீது சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற மூன்று படங்களுமே ரசிகர்களிடையே தனுஷிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து முதல் பாடலான “தாய்க் கிழவி”என்ற பாடல் ஜூன் 24 ஆம் தேதியன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த இந்தப் பாடலின் மீது தற்போது புகார் எழுந்துள்ளது.

அதாவது அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வீடியோ யூ-ட்யூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இருக்கிறது. இந்நிலையில் இப்பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும், சமூக ஆர்வலர் ஒருவர் பாடலின் சில வரிகள் பெரியவர்களை மரியாதை செய்யாத வகையில் உள்ளதாக புகார் அளித்திருக்கிறார். மேலும் இப்பாடலில் இருக்கும் சில வரிகளையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.