8 Way Road Project :
சேலம்: சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என கூறிய தமிழக முதல்வர் பழினிசாமிக்கு, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் தனிநபருக்கானது அல்ல.
மக்களின் வசதிக்காக தான் அமைக்கப்படும். உலக தரத்தில் சாலைகளை அமைக்கவே மத்திய அரசு, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக யாருடைய நிலத்தையும் பறித்து அரசு செயல்படுத்தாது. 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் மக்களிடம் உண்மை நிலையை எடுத்துரைத்து, இத்திட்டம் நிறைவேற்றப்படும்., மேலும் இத்திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் முதல்வரின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காஞ்சிபுரம் திருவண்ணாமலை,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்,
“உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என தமிழக அரசு பிடிவாதம் பிடிப்பது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளனர்” .
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே இந்த 8 வழிச்சாலையை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் துடிக்கின்றன என்று கூறினர்.
மேலும் மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி கமிஷனுக்காகவே இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார் முதல்வர் பழனிசாமி என குற்றம் சாட்டியுள்ளனர்.
8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏராளமான குளங்கள், நீர் நிலைகள், விளைநிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும். இப்படி இயற்கை வளங்களையெல்லாம் அழித்து உலகத்தரத்தில் சாலை அமைக்க மக்களோ, விவசாயிகளோ கேட்கவில்லையே..!
சேலம் 8 வழிச்சாலை.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!
அனைவரும் ஒட்டு மொத்தமாக இத்திட்டத்தை புறக்கணிக்க தானே சொல்கிறோம். ஆனால் மக்கள் குரலை எதிரொலிக்கும் அரசாக ஆளும் அதிமுக அரசு செயல்படவில்லை என ஆவேசமாக கூறியுள்ளனர்.
இயற்கை வளங்களை சூறையாடி உலகத்தரத்தில் சாலைகள் அமைப்பது மக்களுக்காகவே என மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறுகின்றன.
இதனை ஏற்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல.. என இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த திட்டத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.,