2 Gold For India
இந்தியாவிற்கு 2 தங்கம் :
தைபே சிட்டி: ஆசிய ‘ஏர்கன்’ துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 4 தங்கம் வென்றனர்.
சீனதைபேயில், 12வது ஆசிய ‘ஏர்கன்’ துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.
இதன் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் (628.2 புள்ளி), ரவி குமார் (626.3), தீபக் குமார் (626.2) பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அசத்திய திவ்யான்ஷ், 249.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் திவ்யான்ஷ், ரவி குமார், தீபக் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1880.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தென் கொரியாவுக்கு (1862.7 புள்ளி) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இளவேனில் அபாரம்: பெண்களுக்கான தனிநர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் இளவேனில், அபுர்வி சண்டேலா, மேகனா பைனலுக்குள் நுழைந்தனர்.
பைனலில் சிறப்பாக செயல்பட்ட இளவேனில் 250.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சீனதைபேயின் லின் யின்-ஷின் (250.2 புள்ளி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீராங்கனைகளான அபுர்வி சண்டேலா (207.8 புள்ளி), மேகனா (143.3) முறையே 4, 7வது இடங்களை பிடித்தனர்.
பெண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இளவேனில், அபுர்வி சண்டேலா, மேகனா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீனதைபே அணிக்கு (1872.5 புள்ளி) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதனையடுத்து 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் 4 தங்கங்களையும் இந்திய நட்சத்திரங்கள் கைப்பற்றினர். இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு 12 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என, 18 பதக்கம் கிடைத்துள்ளது.