மகாத்மா காந்தி பிறந்தநாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை.!!
சென்னை: தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்..
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இன்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு கீழே காந்தியின் உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இதனை தொடர்ந்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இவ்விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு மாணவ- மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, இன்று மாலை கிண்டி காந்தி மண்டபத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை வகிக்கிறார்.
நிகழ்ச்சியில் செய்தித்துறை சார்பில் புகைப்பட கண்காட்சியும், காந்தி பற்றிய திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.