Jayalalithaa Memorial Opening Ceremony : மறைந்த முதல்வரும் அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச் செயலளாருமான ஜெயலலிதாவின் நினைவிடம் 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் மெரினா கடற்கரை சாலை மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. இதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
பின்னர், வேதா இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் அவரது புகைப்படங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.கவினர் கலந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க தொண்டர்களின் இதய தெய்வமான ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக திறந்து வைக்கப்பட்டது அ.தி.மு.க தொண்டர்களிடயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் தங்களுடைய கோவில் என்று அ.தி.மு.கவினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 அடி முழு உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அ.தி.மு.கவினர், தங்களது கனவுகள் நிறைவேறியுள்ளதாகவும், அதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் கூறினர்.