உலகிலேயே இந்தியா தான் சாலை விபத்துகளில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. ஒரு நாடு கல்வியில், மருத்துவத்தில், வேளாண்மையில் முதலிடத்தில் இருந்தால் நாம் பெருமை படலாம். மாறாக கை, கால் இழப்பிலும் உயிர் இழப்பிலும் முதலாக இருந்தால் எப்படி பெருமைப்பட முடியும்? இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு சாலை விபத்து நடைபெறுகிறது.ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் கொல்லப்படுகிறார்.
நமது சகோதர சகோதரிகளை விபத்து என்ற போர்வையில் கொலை செய்து விட்டு சாதாரணமாக விபத்து என்று பெயர் இடுகிறோமே இதற்கு ஒரு முற்று புள்ளியே இல்லையா?
ஆஸ்திரேலியா போன்ற முன்னேறிய நாடுகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துகளை வெகுவாக குறைத்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மூன்றாவது ஞாயிற்று கிழமையை உலக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் நினைவு தினமாக United Nation-ஆல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 17.11.19 ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது. அந்த தினத்தை முன்னிட்டு இந்தியாவில் முதல் முறையாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்படமான ” பச்சை விளக்கு ” திரைப்பட குழுவினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தியதோடு, டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் உலக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் நினைவு தினத்தை விளம்பரமாகவும் வெளியிட்டு உள்ளனர்.
“பச்சை விளக்கு ” திரைப்படத்தை சாலை பாதுகாப்பில் எஸ்.ஆர்.எம் யூனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள டாக்டர் மாறன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். திரைப்பட கல்லூரியிலும் பயின்றுள்ள இவர் ” கோல்டன் அவர்”, ” இனிய பயணம் ” என இரு குறும்படங்களை இயக்கியுள்ளார்.
புது முகங்கள் மாறன், தீஷா, தாரா ஆகியோருடன் ‘ அம்மணி ‘ சூறையாடல் புகழ் மகேஷ், மனோபாலா, இம்மான் அண்ணாச்சி, போஸ்டர் நந்து, நெல்லை சிவா, நடன மாஸ்டர் சிவசங்கர், விஜய் டிவி நாஞ்சில் விஜயன் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் நாயகி ரூபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘ வேதம் புதிது ‘ தேவேந்திரன் இசையமைக்க, பாடல்களை பழனி பாரதி, விஜயசாகர், டாக்டர் கிருதயா, டாக்டர் மாறன் ஆகியோர் எழுதியுள்ளனர். சிவசங்கர் மாஸ்டர், சந்திரிகா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள்ளனர். எஸ்.பி பாலாஜி ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.